தந்தையுடன் பைக்கில் சென்ற 3வயது குழந்தை மாஞ்சா நூல் அறுத்து உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஏழுகிணறு கிருஷ்ணப்பகுளத் தெருவில் வசிப்பவர் கோபால் (35). இவர் மனைவி சுமித்ரா (28). இவர்களது ஒரே மகன் அபினேஷ்வர் ராவ் (3). நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கோபால், தனது மனைவி மற்றும் மகன் அபினேஷ்வர் ராவுடன் தனது இருசக்கர வாகனத்தில் கொருக்குப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். பின்னர் மாலை தனது வீட்டுக்கு மகனுடன் திரும்பினார். 3 வயது குழந்தை என்பதால் முன்பக்கம் பாதுகாப்பாக அமர்த்தி மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார்.
கொருக்குப்பேட்டை, மீனம்பாள் நகர் பாலத்தின் மேல் தனது இருசக்கர வாகனத்தில் கோபால் வந்துகொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ பட்டம் அறுந்து வந்த மாஞ்சா நூல் மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் சென்றுகொண்டிருந்த அபினேஷ்வரின் கழுத்தை அறுத்தது.
இதில் குழந்தை அபினேஷ்வரின் கழுத்தில் மாஞ்சா நூல் ஆழமாக அறுத்ததில் ரத்த வெள்ளத்தில் அபினேஷ்வர் கீழே விழுந்தார். இதனால் பதற்றமடைந்த கோபால் மோட்டார் சைக்கிளை நிறுத்தி பார்த்தபோதுதான் குழந்தையின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்தது தெரிந்தது. ரத்த வெள்ளத்தில் மயக்கமான குழந்தை அபினேஷ்வரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆட்டோவில் ஏற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து ஆர்கே நகர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மாஞ்சா நூல் பறக்க விட்ட நபர்களை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் நாகராஜ் மற்றும் ஒரு சிறுவனை போலீசார் தற்போது கைது செய்து விசாரித்து வருகின்றனர்.